தமிழ்நாட்டில் ஊழல்கள் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டிய பா.ம.க. இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து ஊழல் பட்டியல் கொடுக்கப்போவதாக அறிவித்தது.
அதன்படி இன்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனு 15 பக்கங்களை கொண்டதாக இருந்தது. அதில் தமிழக அமைச்சர்கள் மீது 24 ஊழல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதன் விவரம் வருமாறு:-
1. தமிழ்நாட்டில் ஆற்றுமணல் விற்பனையில் ரூ.7.10 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரத்தை சிதைத்து வரும் ஆற்று மணல் கொள்ளை மற்றும் ஊழல் பற்றிய விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
2. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் 2ஜி-யை மிஞ்சும் அளவுக்கு தாது மணல் கொள்ளை நடந் திருப்பதாக உயர்நீதி மன்றம் நியமித்த மூத்த வழக்கறிஞர் கூறியுள்ளார். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.
3. தாது மணல் நிறுவனங்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ள 2 கோடி டன் தாது மணலின் சந்தை மதிப்பு குறைந்தது ரூ.5 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
4. அணுகுண்டு தயாரிப்பதற்கான தோரியம் தாதுவை தயாரிக்க பயன்படும் மோனசைட் கலந்த தாது மணலை வெட்டி எடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் அதற்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கி இருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அதுபற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
5. மதுரை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பதால் அதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
6. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் ரூ.320 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
7. பல்கலைக்கழக கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதில் நடந்துள்ள ஊழல் தொடர்பாகவும் விசாரிக்க ஆணையிட வேண்டும்.
8. கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருந்ததற்காக கோடிகணக்கில் கையூட்டு வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
9. கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும்.
10. தனியார் மின்சார கொள்முதல் ஊழலால் ரூ.52 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
11. மின்வாரிய பொறியாளர்கள் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாகவும் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
12.மருத்துவ காப்பீட்டு திட் டத்தில் பிரிமிய தொகையை தேவையில்லாமல் உயர்த்தி வழங்கியதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.303 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளியில் கொண்டுவர வேண்டும்.
13. குட்கா ஊழலில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க ஆணையிட வேண்டும்.
14. வாக்கி-டாக்கி கொள்முதலில் பெருமளவில் ஊழல் நடைபெற்று உள்ளது. இதில் அனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ஒப்பந்தம் வழங்கியது விதிமீறல் ஆகும். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
15. தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறையில் சாலைகள் அமைப்பதற்காக தாருக்கு சந்தை விலையை விட அதிக விலை கொடுத்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
16. சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
17. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ரூ.12 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.
18. முதன்மை தேர்வுகளில் பெருமளவில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகவும் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க வேண்டும்.
19. டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் நியமன ஊழல் தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
20. தொழில் துறை ஊழல்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும்.
21. வேளாண்துறை பவர் டில்லர் ஊழல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
22. சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும்.
23. சென்னை பெருநகர குழும ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்.
24. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஊழல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவர்னரை சந்தித்து விட்டு வெளியே வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினமாகும். தமிழ் நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. ஊழல் பட்டியல் புகார் மனுவை கவர்னரிடம் வழங்கினேன்.
அதனை வரிக்கு வரி படித்து பார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதே போன்று 2015-ம் ஆண்டு கவர்னராக இருந்த ரோசய்யாவிடம் மனு கொடுத்தோம். அதன் மீது அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரி முதல் அனைத்து துறை அதிகாரிகள் மட்டம் வரை ஊழல் நடக்கிறது.
‘நீட்’ தேர்வு பயிற்சி அளிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு கூட லஞ்சம் கேட்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக எந்தவித வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை. அனைத்து துறைகளிலும் அரசுக்கு வருவாய் இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் தங்கள் உரிமைகளை இழந்து வருகிறார்கள்.
இந்த முறைகேடுகள் மற்றும் லஞ்சம் மூலம் தமிழக அரசுக்கு ரூ.4½ லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.