ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

rk-nagar-600

ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

முதல் நாளில் 4 சுயேச்சை வேட்பாளர் கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதையடுத்து ஒவ்வொரு நாளும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை 5 நாட்கள் வேட்புமனு தாக்கல் நடைபெற்று இருக்கிறது. கடந்த 30-ந்தேதி வரை 9 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

 

கடந்த 1-ந்தேதி அ.தி. மு.க. வேட்பாளர் மது சூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சையாக டி.டி.வி. தினகரன் உள்பட 24 பேர் மனுதாக்கல் செய்தனர். மொத்தம் 37 மனுக் கள் பெறப்பட்டு இருக் கின்றன. மதுசூதனன் கூடுதலாக 3 மனுக்களும், மருதுகணேஷ் கூடுதலாக ஒரு மனுவும் கொடுத்து இருக்கிறார்கள்.

 

rk mla

வேட்பு மனுதாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன், ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோர் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய இருக்கின்றனர். மேலும், சில சுயேச்சை வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

நடிகர் விஷால் இன்று மதியம் 12.30 மணி அளவில் சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

 

முன்னதாக அவர் இன்று காலை 9 மணி அளவில் சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

rk mla3

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருக்கிறது.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற 7-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக அறிவித்து இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த முறை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் பலர் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.

rk mla1

ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன் (அ.தி.மு.க.),  மருதுகணேஷ் (தி.மு.க.), கரு.நாகராஜன் (பா.ஜனதா), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) ஆகியோரும், சுயேச்சையாக டி.டி.வி.தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால் ஆகியோரும் போட்டியிடுவதால் 7 முனை போட்டி ஏற்படுகிறது.

6 முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் களத்தில் இறங்குவதால் 7 முனை போட்டி ஆகிறது. பெரிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு விஷால் கடும் போட்டியாக இருப்பார் என்று கூறப்படுகிறது. விஷால் போட்டியிடுவதால் ஓட்டுகள் கணிசமாக பிரியும் என்றும், குறைந்த ஓட்டுகளே வெற்றியை தீர்மானிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.

admk

இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டு இந்த தேர்தலை சந்திக்கின்றனர். அந்த கட்சியின் வேட்பாளர் மதுசூதனன் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 66,710 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றவர். அமைச்சராகவும் இருந்து இருக்கிறார்.

மதுசூதனன் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் என்பதால் அவரது வெற்றி சுலபமானது என்று அ.தி. மு.க.வினர் கூறுகிறார்கள்.

ஆனால் ஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியும் டி.டி.வி.தினகரன், ஜெ.தீபா ஆகியோர் அ.தி.மு.க ஓட்டுகளை பிரிப்பதும் தனக்கு வெற்றியை தேடித்தரும் என்று தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் நம்புகிறார். மேலும் கூட்டணி கட்சிகளின் பலமும் அவருக்கு இருப்பதால் தி.மு.க.வினர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

jayalalitha-new-photo

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த தேர்தல்களில் அ.தி. மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி வென்றுள்ளன. 1977-ல் நடந்த முதல் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது. 1980 மற்றும் 1984 தேர்தல்களில் காங்கிரசும், 1989 தேர்தலில் தி.மு.கவும் வெற்றி பெற்றன. 1996 தேர்தலில் தி.மு.க கைக்கு மாறிய இந்த தொகுதியை 2001, 2006, 2011 தேர்தல்களில் தொடர்ச்சியாக அ.தி.மு.க கைப்பற்றியது.

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா போட்டியிடுவதற்காக, ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதியின் உறுப்பினராக இருந்த வெற்றிவேல் ராஜினாமா செய்ததால் 2015-ல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு அதிலும் அ.தி.மு.க.வே ஜெயித்தது. 2016 பொதுதேர்தலிலும் ஜெயலலிதாவே இங்கு போட்டியிட்டு வென்றார். தற்போது அவரது மறைவையொட்டி 21-ந்தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை தமிழகமே உற்று நோக்குகிறது.

Leave a Response