ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் அவர் போட்டியிடப் போவதாக செய்திகள் வந்துக் கொண்டிருந்தது. ஒரு முக்கிய அரசியல் கட்சி விஷாலை தங்கள் வேட்பாளராக்க முயலுவதாக ஒரு செய்தி வந்துள்ளது. மேலும் கமலஹாசன் விஷாலை தேர்தலில் போட்டியிடச் செய்து பரிசோதனை செய்ய உள்ளதாக மற்றொரு செய்தி வந்தவண்ணம் இருந்தது.
நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என சினிமா சம்பந்தப்பட்ட பொறுப்புகள், பிரச்னைகளையும் தாண்டி, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் நடிகர் விஷால் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.
நடிகர் விஷால் இது குறித்து, “ஆர் கே நகர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நான் இன்னும் யோசித்து வருகிறேன். இரண்டு தினங்களில் எனது முடிவை அறிவிப்பேன். சுயேச்சையாக போட்டி இடுவேனா அல்லது அரசியல் கட்சியின் வேட்பாளராக போட்டி இடுவேனா என்பது குறித்து இப்போது சொல்வதற்கில்லை. நான் முடிவு எடுத்த பின் அனைத்தையும் அறிவிக்கிறேன்” எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷாலும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதை அதிகாரப்பூர்வாக விஷால் அறிவித்துள்ளார். வரும் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். திமுக சார்பில் மருது கணேஷூ, அதிமுக சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் களமிறங்குகின்றனர்.