நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை இந்தியக் கடற்படையை கொண்டு உடனடியாக மீட்கவும்: பாதுகாப்பு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

 201708201458197048_MK-Stalin-report-Will-be-democratically-defeated-to-AIADMK_SECVPF

ஒக்கி புயலால் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை இந்தியக் கடற்படையை கொண்டு உடனடியாக மீட்க வேண்டி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளையும், அதனால் அம்மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகேயுள்ள தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 4000 மின் கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், மின் கம்பிகள் அறுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

மேலும், அம்மாவட்டத்தின் பெரும்பகுதி முழங்கால் அளவுநீரில் மூழ்கியுள்ளதோடு, மின்சார கம்பிகள் அறுந்துள்ளதால் பல இடங்களில் மின்சாரம் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீட்பு முகாம்களில் தங்கியுள்ளனர், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு நிலை இன்னும் திரும்பவிலை.

இந்த இக்கட்டானத் தருணத்தில், இந்திய கடலோர காவல் படையும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், மீன்பிடிப்பதற்காக 100 படகுகளில் சென்ற 1000 மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நடுக்கடலில் தவித்து வருவதாக மீனவக் குடும்பங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளதால், இந்திய கடலோர காவல் படையினர் உடனடியாக மீட்புப்பணிகளில் ஈடுபட வேண்டும்.

 

எனவே, நீங்கள் உடனடியாக தலையிட்டு, ஒகி புயலால் மேலும் உயிரிழப்புகள்ஏதும் ஏற்படாத வகையில், நடுக்கடலில் தங்களது உயிருக்காக போராடி வரும் 1000 மீனவர்களை மீட்க, இந்திய கடலோர காவல் படையினருக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response