`செவிலியர்கள் மிரட்டப்படுகிறார்கள்!’ – கனிமொழி பகிரங்க குற்றச்சாட்டு

f8655d0b11fff9dd6e2d11138eb99fe0

டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்த தி.மு.க எம்.பி கனிமொழி, `போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்படுகிறார்கள்’ என்று பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

 

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3000-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் மூன்று நாள்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப்பெறுவதாக செவிலியர்கள் அறிவித்தனர். சிலர், போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பினர். ஆனால் ஒரு பிரிவினர், ‘எங்களின் கோரிக்கைகள்குறித்து அரசாணை வெளியிடப்படும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்’ என்று கூறி, போராட்டத்தை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றனர்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, `பல பெண்கள், குழந்தைகளோடு வந்து போராட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகூட செய்து தரப்படவில்லை. போராட்டத்தில் பங்கேற்றுள்ள செவிலியர்கள், பல்வேறு வகையில் மிரட்டப்பட்டுவருகிறார்கள். வேலையிலிருந்து தூக்கிவிடுவோம் உள்ளிட்ட பல மிரட்டல்களை செவிலியர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஆளும் அரசு’ என்று குற்றம் சாட்டினார்.

Leave a Response