நேற்று இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, இன்று ஆர்.கே நகர் தேர்தல் அறிவிப்பு. ஏற்கனவே நான் கூறியது தான். நல்ல நாடகம் இங்கே நடக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதிமுகவின் மதுசூதனன் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு வெளியிட்டது. அந்த தீர்ப்பு வெளியிட்ட கையோடு சூட்டோடு சுடாக இன்று ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நடந்த ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலின் போது சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி இரட்டை இலை சின்னத்திற்கும், கட்சியின் பெயருக்கும் உரிமை கொண்டாடின. இதனால் தற்காலிகமாக சின்னம் மற்றும் கட்சியின் பெயர் முடக்கப்பட்டது.
இதனையடுத்து இரண்டு அணிகளும் தங்களுக்கே சின்னம் ஒதுக்கக் கோரி பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் சசிகலா அணியில் இருந்த பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோர்க்க, நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு இவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
ராமதாஸ் கண்டனம்
எம்பி, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் மதுசூதனன் அணிக்கு சின்னத்தை ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சியினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ‘நேற்று இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு. இன்று ஆர்.கே நகர் தேர்தல் அறிவிப்பு. ஏற்கனவே நான் கூறியது தான். நல்ல நாடகம் இங்கே நடக்குது’ என்று டுவீட்டியுள்ளார்.
காவல்துறை அடக்கி வாசிக்கும்
மற்றொரு டுவீட்டில் ஆர்.கே.நகர் தேர்தலில் கடந்த முறை தினகரனும், திமுகவும் மட்டுமே பண வினியோகம் செய்தனர். இந்த முறை பினாமி அணியும் வாரி இறைக்கும். காவல்துறை அடக்கி வாசிக்கும், ஆர்கே நகர் மக்களுக்கு கொண்டாட்டம்! என்று தெரிவித்துள்ளார்.
சோதனை நடத்த மாட்டார்கள்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல். இந்த முறை விஜயபாஸ்கர் வகையறாக்கள் பணத்தை துணிச்சலாக வாரி இறைக்கலாம். வருமானவரித்துறை அதிகாரிகள் நிச்சயம் சோதனை நடத்த மாட்டார்கள் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.