நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள கோழிபாலம் பகுதியில் பாரதியார் பல்கலைகழக கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்திற்குள் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் விடுதியும் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்திற்குள் திடீரென ஒற்றை காட்டு யானை புகுந்தது. அந்த நேரம் கல்லூரி மாணவர்கள் மைதானத்தில் விளையாடி கொண்டு இருந்தனர். கல்லூரிக்குள் புகுந்த யானை அங்கும் இங்குமாக ஓடியது. இதனால் மாணவர்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். தகவல் அறிந்து காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனால் கல்லூரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.