கொல்கத்தாவில் உலக சினிமா விழா நேற்று தொடங்கி நவ.17 வரை நடக்கிறது. இதன் தொடக்க விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். விழாவை நடிகர் அமிதாப்பச்சன் துவக்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஷாருக்கான், மகேஷ் பட், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் அங்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் கமல்ஹாசன், ‘உங்கள் மாநில கலாச்சாரம் எனக்கு பிடிக்கும், உங்கள் முதல்வர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன், அவருடன் மரியாதை நிமித்தமாகப் பேசினேன். அரசியல் பேசவில்லை’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு குறித்து கமல் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
மம்தா பானர்ஜிக்கு எனது நன்றி. மீண்டும், மீண்டும் என்னை அழைத்து சினிமா எனது குடும்பத்தைப் பெருமைப்படுத்துகிறார். நானும் இக்குடும்பத்தில் ஒருவனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இது சிறந்த உதாரணம்’’ எனக்கூறியுள்ளார்
கேரளாவில் ஆளும் இடதுசாரி முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன் தற்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.