தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் சாய்னா!!

saina-nehwal_660_021013051801
தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – 82 மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நேற்று நிறைவடைந்தது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா நெவால், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து ஆகியோர் மோதினர். இதில், 21-17, 27-25 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்துவை வீழ்த்தினார் சாய்னா நெவால். இதன்மூலம் தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் சாய்னா.

அதேபோன்று, ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்ரீகாந்த் மற்றும் பிரணாய் மோதினர். இதில், பிரணாய் 21-15, 16-21, 21-7 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் வென்றார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த மனு அட்ரி – சுமீத் ரெட்டி இணை 15-21, 22-20, 25-23 என்ற செட் கணக்கில், போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த சாத்விக் – சிரக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த சிக்கி ரெட்டி – அஸ்வினி பொன்னப்பா இணை , 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில், சன்யோகிதா கோர்படே – பிரஜக்தா சாவந்த் இணையை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி சாம்பியன் வென்றது.

கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சாத்விக் சாய் ராஜ் – அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 20-22, 21-17 என்ற செட் கணக்கில், உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் பிரணவ் ஜெர்ரி சோப்ரா – சிக்கி ரெட்டி இணையை வீழ்த்தி சாம்பியன் வென்றது.

Leave a Response