கனமழை காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் இம்மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் ஐந்து நாளாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாலை நேரங்களில் பெய்யும் மழை இரவு முழுவதும் தொடர்வதால் கடந்த ஐந்து நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடியபெய்த காரணத்தால் அண்ணா பல்கலைக்கழகம் நேற்றைய தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது. இன்று வழக்கம் போல தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என முதலில் தெரிவித்தது. இந்நிலையில், நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 25-ம் தேதி நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.