காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து அதனை சுற்றி உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக குடியிருப்புப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள ஏரியின் முழு கொள்ளவான 23 அடியில் தற்போது 20 அடி நீர் உள்ளது. இதன் காரணமாக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர் கிளியாற்றின் வழியாக திறந்து விடப்பட்டு வருவதால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணையின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும், புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.