ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தனது பதவியில் 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். பல மாநிலங்களுக்கு சென்றுள்ள ராம்நாத் கோவிந்த், இந்தாண்டு இறுதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார்.
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூலை 25ம் தேதி பொறுப்பேற்றார். நேற்றுடன் அவர் தனது பதவியில் 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா, கேரளா, உட்பட பல மாநிலங்களுக்கு சென்றுள்ளார். இந்தாண்டு இறுதிக்குள் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய ராம்நாத் கோவிந்த் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் 6ம் தேதி முதல் அரசு முறைப் பயணமாக டிஜிபோட்டி, எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு சென்றார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியைப்போல் அதிக ஓய்வு இல்லாமல், பயண திட்டங்கள் வகுக்கப்பட்டன.
ராஷ்டிரபதி பவனிலும் அலுவலக பணிகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இந்தியாவில் நியமிக்கப்படும் வெளிநாட்டு தூதர்கள், ஜனாதிபதியிடம் அதிகாரச்சான்று பெற மாதக் கணக்கில் காத்திருப்பர். ஆனால் தற்போது 2 முதல் 3 வாரங்களில் அதிகாரச்சான்று வழங்கப்படுகிறது. ரஷ்ய தூதர், பாகிஸ்தான் தூதர் உட்பட இதுவரை 12 தூதர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் அதிகாரச் சான்று பெற்றுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் மற்றும் கடத்தலுக்க எதிரான விழிப்புணர்வு பேரணியை நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி சமீபத்தில் டெல்லியில் நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சியில் தலித் சிறுமி ஒருவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனக்கு அடுத்த இடத்தில் அமர வைத்தது சத்யார்த்தியை நெகிழ வைத்தது.