நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி, அட்சயா. இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தனர். கந்துவட்டிக் கொடுமையால் நால்வரும் தீக்குளித்ததாக அவரது சகோதரர் கோபி தெரிவித்தார்.
70 சதவீதத்துக்கும் மேலான தீக்காயங்களுடன் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி,
அட்சயா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து மட்டும் உயிருக்குப் போராடி வருகிறார். இந்நிலையில், தீக்குளித்து இறந்த தாய் மற்றும் 2 மகள்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்துவும், உயிரிழந்தார்.
கந்துவட்டி கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தமிழகத்தில் கந்துவட்டியால் பாதிக்கபட்டோர் குறித்து பல்வேறு பிரச்சனைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இசக்கிமுத்து குடும்பத்தினர் ஆட்சியர் வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்ததை அடுத்து, அலுவலகத்தில் தீ பாதுகாப்பு கருவிகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயன்றார்.
இதனை அடுத்து, நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள 9 வாயில்களில் 7 வாயில்களை நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும் ஒரு வாயிலை தற்காலிகமாக மூடம் பணி நடைபெற்று வருகிறது.