சென்னை மாநகர பேருந்துகளில் தினமும் 42 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சென்னை மாநகர, போக்குவரத்து கழகம் சார்பில் 3365 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மாநகர பஸ் மூலம் சென்னை நகர் முழுவதும் 40 கி.மீட்டர் வரை மக்களுக்கு பயண சேவை கிடைத்து வருகிறது.
மெட்ரோ ரெயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம், திருமங்கலம்-நேரு பூங்கா வரை பொதுமக்கள் விரைவு பயண சேவை புரிந்து வருகிறது. மெட்ரோ ரெயிலில் தினமும் பல ஆயிரம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநகர பஸ்- மெட்ரோ ரெயிலில் ஒரே கார்டு மூலம் பயணம் செய்யும் வசதி விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய வடிவிலான ‘ஸ்மார்ட் கார்டு’ தயாரிக்கப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு தலைமை செயலாளருடன் மெட்ரோ ரெயில் உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து வருகிறார்கள். 6 மாதங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் மெட்ரோ ரெயில் விரைவு பயணத்தை பொதுமக்கள் பெரிதும் விரும்புகிறார்கள் சென்னை மாநகர, பயணிகள் வசதிக்காக ஒரே கார்டில் மெட்ரோ ரெயில், பஸ்சில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதற்காக புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவமைக்கப்படுகிறது. டெபிட் கார்டு, கிரடிட் கார்டு மூலம் இந்த கார்டினை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த கார்டு வைத்திருப்பவர்கள் ஒரே நேரத்தில் மெட்ரோ ரெயிலிலும், பஸ்சிலும் பயணம் செய்யலாம். பஸ் மெட்ரோ ரெயிலில் இந்த ‘ஸ்மார்ட்’ கார்டை அங்குள்ள ‘ஸ்வைப்பிங்’ மெஷினில் காண்பித்து பயணம் செய்யலாம்.
வெளிநாடுகளில் இந்த ஸ்மார்ட் கார்டுகள் நடை முறையில் உள்ளது. அதேபோல சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.