எண்ணூர் துறைமுகத்துக்கு சென்று நான் பார்வையிட்டதற்கு பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் கமலும் தனது டுவிட்டர் பக்கத்தில் வடசென்னைக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கமல் நேரடியாக களத்தில் குதிக்க முற்பட்டு இன்று அதிகாலை எண்ணூர் முகத்துவாரம் மற்றும் சாம்பல் குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நடிகர் கமல் பார்வையிட்டார். அப்போது அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் நடிகர் கமலின் இந்த நடவடிக்கையை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழகம் முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செல்ல வேண்டும் என்றார். அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் நடிகர் கமலின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு அவர் சினிமாவில் சாதித்ததுபோல் அரசியலிலும் சாதிப்பார் என்றார். இந்நிலையில் நடிகர் கமலுக்கு அவ்வப்போது பதிலடிக் கொடுத்து வந்த அமைச்சர் ஜெயக்குமாரும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு நடத்தலாம் என்றிருந்தார்.
இதையடுத்து தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நடிகர் கமல் நன்றி தெரிவித்து டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்புக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது என்று பதிவிட்டுள்ளார்.