வங்கிக்கணக்கு, தொலைபேசி எண் மற்றும் வருமான வரிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கல்யாணி மேனன் என்ற சமூக ஆர்வலர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், வங்கிக்கணக்கு வைத்திருப்போர் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மக்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பயோ மெட்ரிக் முறை மூலம் தெரிவிக்க வேண்டிய சூழலை உருவாக்கியிருப்பதாகவும், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்க இயலாமல் போய்விடக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கிக்கணக்கும் தொலைபேசி எண்ணும் ஒருவருடைய தனிப்பட்ட உடைமை என்றும் கல்யாணி மேனன் கூறியுள்ளார்.
பயோ மெட்ரிக் முறைக்கு தங்கள் விவரங்களைத் தெரிவிக்க விரும்பாத வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக பார்க்கப்படும் சூழலை இது ஏற்படுத்துவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.