பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் ஒரே நாளில் 120 மிமீ மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குளங்கள் நிரம்பி வழிந்தன. இந்த மழைக்கு மக்காச்சோள பயிர்கள் பெருமளவில் சேதமடைந்ததுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 908 மிமீ ஆகும். இதன்படி ஜனவரி மாதம் முதல் அக்டோபர் 5ம்தேதி வரை மட்டுமே 673 மிமீ மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே சராசரியாக பெய்ய வேண்டிய 95 மிமீ மழைக்கு பதிலாக, நடப்பாண்டு 222.40 மிமீ மழை கொட்டித்தீர்த்துள்ளது.
அதேபோல், செப்டம்பர் மாதத்தில் சராசரியாக 129 மிமீ மழைபெய்ய வேண்டும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் 194 மிமீ மழை பெய்துள்ளது. அக்டோபரில் 5ம் தேதி மாவட்ட அளவில் 48 மிமீ மழை பெய்தது. இந்நிலையில் 8ம் தேதி இரவு மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் 140 மிமீ மழை பெய்துள்ளது. இதில் பெரம்பலூர் 11 மிமீ, வேப்பந்தட்டை 120 மிமீ, தழுதாழை 9மிமீ மழை பெய்துள்ளது.
இதனால் வேப்பந்தட்டை அருகேயுள்ள குளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. எசனை ஏரி 30 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அன்னமங்கலம் தனப்பிரகாசம் நகர் குளம் நிரம்பி வழிந்தோடியது. இருந்தும் விசுவக்குடி அணைக்கட்டுக்குள் சிறிதளவு மழைகூட பெய்யவில்லை.
8ம்தேதி பெய்த கனமழையால் அன்னமங்கலம், விசுவக்குடி, அரசலூர் பகுதிகளில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் கதிர்விட்ட நிலையில் சாய்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தும் பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயராத காரணத்தால் விவசாயிகள் பெரிதும் சங்கடத்திற்கு உள்ளாகி உள்ளனர். இருந்தும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கவுள்ளதால், அதில் தேவைக்கேற்ப மழைபெய்யுமென எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.