நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ எதிரே ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி சிவாஜி மணிமண்டத்தில் அமைத்தது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இந்த மணிமண்டபத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த அறிவிப்புக்கு நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். அது மட்டுமல்லாது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு காலத்தில் நடிகர் சிவாஜி கணேசனுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருந்தது.
இந்த நிலையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரபு மற்றும் அவரின் குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசின் இந்த அறிவிப்பால், சிவாஜி கணேசன் குடும்பத்தார் மட்டுமன்றி நடிகர், நடிகைகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அக்டோபர் 1 ஆம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி அரசு விழா ஒன்றில் பங்கேற்க உள்ளதால், மணிமண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இயலாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது