கணவரின் குடி பழக்கத்தால் 4 வயது மகளை கொலை செய்த இளம்பெண் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகை ஜோதி. 4 வருடங்களுக்கு முன்பு இவருக்கும் கோவையை சேர்ந்த சசி என்பவருக்கும் திருமணம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுபிக்ஷா என்ற 4 வயது மகள் இருந்தார்.
தனியார் பேருந்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த சசிக்கு குடி பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக தெரிகிறது.
இதையடுத்து கார்த்திகை ஜோதி மகளுடன் பழனியில் தனது பாட்டி சின்னாள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சின்னாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியபோது கார்த்திகை ஜோதியும், அவரது மகளும் இறந்து கிடந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கார்த்திகைஜோதி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சசியை காதலித்து ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் அதன்பிறகு ஒருவருடம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
சசிக்கு குடிபழக்கம் மற்றும் வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததால் கார்த்திகைஜோதி அவரை விட்டு பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் ஜோதி உறவினர் ஒருவருக்கு எழுதிய கடித்தத்தில் என் வாழ்க்கையில் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. என் கணவர் திருந்தி விடுவார் என எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து விட்டேன். இதனால் நான் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளேன்.
எனது மகளை யாரிடமும் விட்டு செல்ல எனக்கு மனமில்லை. எனவே அவளையும் என்னுடன் அழைத்து செல்கிறேன் என எழுதி இருந்தார். அந்த முடிவின்படியே மகளை சேலையால் கழுத்தை இறுக்கி கொன்று விட்டு பின்னர் அதே சேலையில் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.