அக்காள் தம்பி பாசத்தை மையக் கருவாக கொண்ட படம்
தமிழ் நாட்டைச் சேர்ந்த நாயகன் கோகுல் கேரளாவில் காயலான் கடை வைத்துள்ள அப்புக்குட்டியிடம் வேலை செய்கிறான். அந்த ஊரிலேயே அவன் காதலிக்க ஒரு மலையாள மல்கோவா சிக்காமலா போகும். சிக்குகிறது.
காதலில் சிக்கினால் வாழ்க்கையில் சிக்கல் வராமலா? வருகிறது…
அம்மா இறந்து போகிறார். அக்காவுக்கு செல்போன் வெடித்து காது கேட்காமல் போய், கல்யாணம் செய்வதில் தடை ஏற்படுகிறது. அக்காவை கூட்டிக் கொண்டு கேரளா வருகிறான். செய்யாத தப்புக்கு கேரள போலீஸிடம் மாட்டி உதைபடுகிறான்.
தன் காதலியைக் கைப்பிடிக்க வேண்டும், அக்காவுக்கு காது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்… அதற்காக நேர்மையை விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை.
இந்த நிலையில் முடிவு என்ன என்பதே கொஞ்சம் கொஞ்சம் சொல்லும் கதை!
இயக்கம் உதய் சங்கரன். இவர் ஏற்கனவே ‘விருந்தாளி’ படத்தை இயக்கியவர்!
நாயகன் கோகுலாகட்டும், அவருக்கு நண்பர்களாக வருபவர்களாகட்டும், அவருக்கு அக்காவாக வருபவராகட்டும், அப்புக்குட்டியாகட்டும், அந்த கேரள முரட்டு போலீஸ்காரராகட்டும், சுயநல நல்லவர் கேரக்டரில் வருகிற மன்சூரலிகானாகட்டும் அத்தனை பேரும் கதைக்குள் அழகாக பொருந்துகிறார்கள்!
கதாநாயகி நீனுவின் சின்னச் சின்ன குழந்தைத்தனமும் காதலுக்குள் விழுந்தெழும் குமரி’த்தனமும் அழகு!
பொள்ளாச்சி மற்றும் கேரளத்தின் அழகை அணுஅணுவாய் ரசிக்கத் தருகிறது பி.ஆர். நிக்கிகண்ணனின் ஒளிப்பதிவு! இவர் கேவி. ஆனந்திடம் உதவியாளராக இருந்தவராம்.
வல்லவன் இசையில் பாடல்களில் மெல்லிய இனிமை!
காயலான் கடையில் வேலை பார்க்கும் நாயகனுக்குள் இருக்கும் அறிவியல் மூளையை கதைக்குள் இன்னும் நேர்த்தியாக கையாண்டிருந்திருக்கலாம்!