நாட்டில் பல்வேறு நகரங்களில் பள்ளிக்குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நடப்பது அதிகரித்து வருகிறது.
இது குறித்து, மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின் மத்திய அமைச்சர் மேனகா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
பள்ளிகளில் ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு, புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்காக கடைபிடிக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க அமைச்சகங்களுக்கு இடையிலான 6 செயலாளர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து, நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுத்துவார்கள்.
இந்த குழுவில் மனிதவளம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, பழங்குடி விவகாரம், சிறுபான்மை விவகாரம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் இடம்பெறுவார்கள். இவர்கள் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்த செயல்திட்டம் வகுப்பார்கள்.
பள்ளிகளில் பெண் டிரைவர்களை வேலைக்கு அமர்த்துதல், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் குறித்த குறும்படம் வெளியிடுதல், பாலியல் துன்புறுத்தலில் இருந்து விழிப்புணர்வு உண்டாக்க போஸ்கோ பூத்கள் அமைத்து, பாலியல் புகார்களை எப்படி கொடுப்பது என்பதை புரியவைத்தல், குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை ஆலோசிக்கப்பட்டது’’ என தெரிவித்தார்.