ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கிய படம் ‘கோலிசோடா’. நான்கு அனாதை பையன்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக அந்த படம் வெற்றியாக அமைந்து விஜய் மில்டனுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.
அதையடுத்து விக்ரமை வைத்து அவர் இயக்கிய ‘பத்து எண்றதுக்குள்ள’ பெரிதாக ஓடவில்லை என்றபோதும், அதன்பிறகு இயக்கிய ‘கடுகு’ ஒரு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்த நிலையில், தற்போது ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் விஜய்மில்டன்.
மேலும், இந்த படத்தின் கதைக்கும், முதல் பாகத்தின் கதைக்கும் துளியும் சம்பந்தம் இல்லையாம். அதோடு அந்த படத்தில் நடித்த ஒருவர்கூட இந்த இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லையாம். அந்த அளவுக்கு முழுக்க முழுக்க ஒரு மாறுபட்ட கதையில், புதிய கலைஞர்களை வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார் விஜய்மில்டன். மேலும், இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம். அவரைச்சுற்றித்தான் மொத்த கதையும் நகருகிறதாம். அந்த வேடம் பிரச்சினைகளை சமாளிக்கும் ஒரு செண்டிமென்ட் மனிதரைப்பற்றிய வேடமாம். அதனால் மிக உருக்கமாக நடித்துக்கொண்டிருக்கிறாராம் சமுத்திரகனி. அதேபோல், ‘கடுகு’ படத்தில் நடித்த விஜய்மில்டனின் தம்பி பரத்சீனியும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.