எம்.ஜி.ஆர் நடித்த படகோட்டி, சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் டி. பிரகாஷ்ராவ். அவருடைய பேரன் சத்யா, ‘யார் இவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.
இவர், எஸ்.எம்.எஸ், பீமிலி கபடி ஜட்டு, ஷங்கரா ஆகிய தெலுங்குப் படங்களை இயக்கி மாபெரும் வெற்றியை கண்டவர். இவர் இயக்கும் முதல் தமிழ் படம் இது!
இப்படத்தில் சச்சின் நாயகனாகவும், ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஆடுகளம் கிஷோர், பிரபு, சதீஷ், ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் படத்தின் நாயகன் சச்சின், இயக்குநர் சத்யா, நடிகர் சதீஷ், ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் சதீஷ்,
“படப்பிடிப்பு ஒரு கப்பலில் நடைபெற்றது. நான், கப்பல் நல்லா இருக்குல்ல? சார் என்று சச்சினிடம் சொன்னேன். அதற்கு அவர் இந்த கப்பலே நம்மோடதுதான் சார் என்றார். ஒரு ஹோட்டலில் படப்பிடிப்பு நடத்தினோம். இந்த ஹோட்டல் சூப்பரா இருக்கிறது என்றேன். அதற்கு அவர் உடனே, இந்த ஹோட்டலும் நம்மோடது தான் சார் என்றார். சச்சின் ஒரு பெரிய பிஸினஸ் மேன். அவரைச் சுற்றி எப்போதும் பல வேலையாட்கள் சூழ்ந்து கொண்டிருப்பார்கள்” என்று நாயகன் சச்சினை பற்றி பெருமிதமாக சொன்னார்.
கதையின் நாயகன் சச்சின், “சதீஷ் சொன்னார் நான் ஒரு பிரபல பிஸினஸ் மேன் என்று. ஆனால் நான் என்னுடைய எட்டு வயதிலேயே படத்தில் நடித்தேன். நடிப்பு என்பது என்னுடைய ஆசை மட்டுமல்ல நான் விரும்பும் தொழிலும் கூட. நான் செய்யும் பிஸினஸ் எல்லாம் என்னுடைய தந்தை ஆரம்பித்தது. எனவே என்னுடைய முதல் முகவரி நடிகன் தான். அடுத்ததுதான் பிஸினஸ்’’ என சச்சின் தெரிவித்தார்.
இயக்குநர் சத்யா பேசும்போது, ‘யார் இவன்’ படத்தின் கதைக்களம் கபடி! கபடி விளையாட்டோடு ஒரு அழகிய காதலும் அத்தோடு பரபர விறுவிறு கிரைமும் கலந்த கதை! திரில்லர் படங்களை எடுத்துக் கொண்டால், சீட் நுனியில் ஆடியன்ஸை உட்கார வைக்கும் கதை என்றெல்லாம் சொல்வார்கள். நாங்கள் அதை எங்கள் படத்தில் செய்திருக்கிறோம்!’’ என்றார் உறுதியாக!
இப்படத்தின் சில பாடல் காட்சிகள் போலந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளதாம்! படம் வருகிற 15-ம் தேதி வெள்ளியன்று உலகெங்கும் வெளியாகிறது!