உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக இருந்து வருகிறார்.
கோரக்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானார்கள்.
இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதை மறுத்த மாநில அரசும், மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் மூளை அழற்சி நோயால் குழந்தைகள் இறந்தனர் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநில முதல்வர் யோகி ஆத்தியநாத் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.
குழந்தைகள் இறந்தது குறித்து ஆய்வு செய்ய மருத்தவர்கள் குழுவும் ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழு ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டுமே மேலும் 35 குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதில் 15 பச்சிளங் குழந்தைகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. திங்கள்கிழமை மட்டுமே ஒரே நாளில் 24 குழந்தைகள் மூளை அழற்சி நோயால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த கோரக்பூருக்கு நாளை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி செல்கிறார். பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.