கன்னட நடிகர் உபேந்திரா துவங்கும் புதிய கட்சி… விரைவில் பெயர் அறிவிப்பு

upendra-2
பிரபல கன்னட திரைப்பட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதைய சிஸ்டத்தை மாற்றி அமைக்கவே தாம் அரசியலில் நுழைவதாகவும் உபேந்திரா கூறியுள்ளார். கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கவும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கன்னட நடிகர் உபேந்திரா விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் உபேந்திரா கூறியதாவது:
ubendra
அரசியல்வாதிகள் மக்களை ஜாதிகளின் பெயராலும் மதத்தின் பெயராலும் கூறு போடுகின்றனர். மக்களுக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும். ஆனால் நடைமுறை அப்படி இல்லை.

ஆகையால் மக்களுக்காக சேவையாற்ற, தற்போதைய சிஸ்டத்தை மாற்ற நான் அரசியலுக்கு வருகிறேன். விரைவில் தனிக்கட்சி தொடங்குவேன். இது தொடர்பாக மக்களிடம் கருத்துகளை கேட்டு வருகிறேன்

கர்நாடகா சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். விரைவில் கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படும். திரைப்படங்களில் அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நிறையவே சண்டை போட்டிருக்கிறேன். தற்போது மக்களுக்காக நிஜவாழ்க்கையில் போராட களமிறங்குகிறேன்.

முன்னதாக அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் உபேந்திரா இணைய கூடும் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது தனிக்கட்சி தொடங்குவதாக உபேந்திரா அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Leave a Response