உத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் 60க்கும் அதிகமான குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு ஆக்சிஜன் சிலிண்டர் தடை பட்டது காரணமா என்பது குறித்து விசாரணை நடததப்படும் என முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோரக்பூர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த எம்பி தொகுதியாகும்.
குழந்தைகளின் இறப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர், ”குறை பிரசவம் மற்றும் மூளை வீக்க நோய் ஆகியவைதான் குழந்தைகள் உயிரிழக்க காரணம். சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் தடை பட்டதாகவும், இதனால் குழந்தைகள் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போது முதல்வர் யோகி ஆதித்ய நாத்,”இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைத்துள்ளோம். குழந்தைகள் இறப்பு சம்பவத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் தான் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்வதற்கான அனுமதி அந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இதுகுறித்தும் விசாரிக்கப்படும். மருத்துவ கல்லூரியின் முதல்வரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை பாயும். இந்த விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்று என்பதால் ஊடகங்கள் ஊதி பெருக்க வேண்டாம்” என்றார்.