ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டத்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர்.
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் www.irctc.co.in எனும் இணையதளத்தில், ஆன்லைன் மூலம், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்யும்போதே, உணவும், முன்பதிவு செய்து கொள்ளலாம். ‘டிக்கெட்’ முன்பதிவு செய்யும் பயணியர், பல்வேறு காரணங்களால், அதை ரத்து செய்வதும் வழக்கம்.
இந்நிலையில், இணையதளம் மேம்படுத்தும் பணிகள் நடப்பதால், இன்றும், நாளையும், ‘டிக்கெட்’ முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முடியாது என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது. இதைப்பற்றி
அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரயில்வே துறையை, ‘டிஜிட்டல்’ மயமாக்குவதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தற்போது தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் காரணமாக, 23ம் தேதி மாலை, 6:15 முதல், 24ம் தேதி காலை, 7:00 மணி வரை, ‘டிக்கெட்’ முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் வசதி, செயல் படாது; அதன் பிறகு வழக்கம்போல் இணையதளம் செயல்படும்.