ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்…

oru-kidayin-karunai-manu_640x480_51496228404
உலக சினிமா என்பதற்கு என்ன இலக்கணம் கதையிலோ, தயாரிப்பிலோ இலக்கணம் ஏதும் இல்லை. உலகத்தில் எந்த நாட்டின் மக்கள் பார்த்தாலும் படம் சொல்லும் உணர்வை, அவர்களையும் உணர வைப்பதில் படம் வெற்றி பெற்றால் அது உலக சினிமா தான். பிரம்மாண்டங்களோ தொழில்நுட்ப அதிநவீனங்களோ தான் அடிப்படைத் தகுதி என்பதல்ல. உலகெங்கும் காலம் கடந்தும் பேசப்படும், போற்றப்படும் படங்கள் பிரம்மாண்டங்களால் பேசப்படுபவை அல்ல. பார்ப்பவர்களுக்கு அந்தப் படம் கடத்தும் உணர்வுகளால் பேசப்படுகின்றன. உணர்வென்றதும் அது சோகம் மட்டுமல்ல, பிற உணர்வுகளும் தான். நம் மண்ணின் பேசப்படாத கதைகளை மிக சுவாரசியமான விதத்தில், தொழில்நுட்ப நேர்த்தியுடன் பேசியுள்ள சில படங்களில் ஒன்றாக சேர்ந்துள்ளது, ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

ஒரு ஆட்டின் பார்வையில் அந்த சிறிய, எளிய கிராமத்தின் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மெல்ல அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே, இது வேறு படம் என உணர்த்தி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. சற்று தாமதமாய் திருமணம் ஆகிய முதிர்கண்ணன் விதார்த். தன் திருமணம் முடிந்தவுடன், பாட்டியின் வேண்டுதலின் படி, ஊரோடு சேர்ந்து குல சாமிக்கு கிடாய் வெட்ட லாரியில் கிளம்புகிறார். வழியில் ஏற்படும் பிரச்சனையும் அதை ஊரோடு சேர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் விதமும், விளைவுகளும், அந்த கிடாயின் கருணை மனு ஏற்றுக்கொள்ளப் பட்டதா இல்லையா என்பது தான் கதை. அத்தனை பிரச்சனையிலும் தன் வயதைப் பற்றி கவலைப்படும் நாயகன் ராமமூர்த்தி, கொண்டி, அரும்பாடு, RSR என கெத்தாக பெயரை வைத்துக் கொள்ளும் லாரிக்காரர், எங்கு விசேஷம் நடந்தாலும் கறிச்சோறு திங்கக் கிளம்பிவிடும் வைரவன்-பைரவன், சமையல்காரர் என ஒரு கிராமத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித விதமாய், சுவாரசியமாய் கதைக்கு வழு சேர்க்கும்படி அமைத்துள்ளார் இயக்குனர்.

சிறிய கிராமத்தை சேர்ந்த எளியவர்கள் என்றாலும், ஒரு சூழ்நிலையை கையாளத் தெரியாத நிலையிலும், ஒன்றாக இருக்கும்போது அவர்களுக்குள் ஏற்படும் கும்பல் மனப்பான்மையையும் (mob mentality), சட்டங்களையும் குற்றங்களையும் கையாளத் தெரிந்த வழக்கறிஞர், போலீஸ், மருத்துவர் ஆகியோர் சம்பவங்களைத் தங்கள் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்வதையும் சேர்த்துப் பேசியிருப்பது சிறப்பு. காரணம் அறியாமல் வெட்டப்படப்போகும் கிடாயாய் எளிய மனிதர்கள் இருப்பதை உணர்த்தியிருக்கிறார்.

விதார்த், கதைத்தேர்வுக்கும் கதையைத் தாண்டி வெளியே துருத்தாத நடிப்பிற்கும் பாராட்டப்பட வேண்டியவர். ரவீனா, கவிஞர் விக்ரமாதித்யன், ஜெயராஜ், ஆறுமுகம் என நடிகர்கள் அனைவரும் கதாப்பாத்திரமாய் இயல்பாக ஒன்றியிருக்கின்றனர். கிராமத்தில் இயல்பாகப் பேசப்படும் கெட்ட வார்த்தைகள், ‘உப்புமாவுக்கு எதுக்குடா கத்திரிக்கா கேக்குறான்’ போன்ற போகிற போக்கில் நிகழும் நகைச்சுவை, ‘பொய்ய சொன்னா கவுரவம், உண்மைய சொன்னா கேவலம்னு சொல்றாய்ங்க’, நூறு நாள் வேலைத் திட்டத்தில் மக்கள் பேசிக்கொள்பவை என படம் ஏற்படுத்தும் ஈர்ப்பில், வசனத்தின் பங்கு பெரியது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே, கதை அந்த பொட்டல் காட்டிற்கு வந்துவிடுகிறது.

அங்குதான் மீதிக் கதை என்னும் சவாலை மிக அழகாக வென்றுள்ளன இயக்குனர் சுரேஷ் சங்கையா- குருநாதன் ஆகியோரது வசனங்களும் சரணின் ஒளிப்பதிவும். ‘இருள் என்பது குறைந்த ஒளி’, என்பது போல இரவுக்காட்சிகளையும், செயற்கை ஒளி கண்களை உறுத்தாமல் அமைத்திருக்கிறார் சரண். ‘உன் கூட நான் சேர ஏழு செருப்பு தேஞ்சுதடி’ என திருமணம் ஆகக் காத்திருக்கும் இளைஞனின் ஏக்கத்தையும், குல சாமியின் முக்கியத்துவத்தையும் பாடல்களில் அழகாகக் கூறியிருக்கிறார் பாடலாசிரியர் வேல்முருகன். ரகுராமின் இசையில் பாடல்கள் இனிதாகவும் அளவாகவும் அமைந்துள்ளன. தேவையான இடங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது பின்னணி இசை.

நிஜமான ஊர், மனிதர்கள், பேச்சுகளுக்கிடையில் அந்த மண்டபம் செயற்கை என்பது சற்று தனியாக தெரிந்துவிடுகிறது. ‘அத்தனை பேரில் ஒருவருக்குக் கூட நேர் வழியில் பிரச்சனையை தீர்க்கத் தோன்றவில்லையா’ என்று நமக்குள் ஏற்படும் கேள்விக்கு ஒரு வசனமே பதிலாய் இருந்தாலும், கேள்வி இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஊடகங்கள் செய்வதுதான் என்றாலும் அந்த இறுதிக் காட்சிகள் டாக்குமெண்டரி உணர்வைத் தருகிறது.

Leave a Response