பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகமாக உள்ளது. அவற்றில், 40 – 50 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் தான், பெரும் தொகை நிலுவையில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
அத்தொகையை வசூலித்தாலே,வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையின் பாதிப்பை, பெருமளவு குறைத்து விடலாம். அதன் மூலம், சொத்து மதிப்பு பாதிப்பில் இருந்து, வங்கிகள் மீள முடியும்.
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைக்கு தீர்வு காண, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.
கடனாளிகளிடம் இருந்து, பணத்தை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை உருவாக்கும் பணியில், ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது. இந்த திட்டம் பற்றி, அடுத்த சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.
கடந்த, 2016 மார்ச் நிலவரப்படி, 5.02 லட்சம் கோடி ரூபாயாக இருந்த, பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், டிசம்பரில், 6.06 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்…