டி.டி.வி. தினகரனை ஆதரித்து களத்தில் இறங்கும் 12 நட்சத்திர பேச்சாளர்கள்!

R
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

ஆளுங்கட்சி ஆதரவு வேட்பாளரான டி.டி.வி. தினகரன் நேற்று முன்தினம் முதல் பிரசாரத்தை தொடங்கினார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ‘தொப்பி’ சின்னத்தில் அவர் ஆதரவு கேட்டு வருகிறார்.

புதிய சின்னம் ‘தொப்பி’ வாக்காளர்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்பதற்காக பிரசாரத்தில் ஈடுபடும் தொண்டர்கள், பெண்கள் தொப்பி அணிந்து செல்கின்றனர். ஆர்.கே.நகர் தொகுதி மக்களை வீடு வீடாக சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டி.டி.வி. தினகரன் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆட்டோ, ஜீப் ஆகிய பிரசார வாகனங்களில் செல்லும் அவர் வாகனங்கள் செல்ல முடியாத குறுகிய சாலைகளில் நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறார்.

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நடிகர்கள் செந்தில், பொன்னம்பலம், அஜய் ரத்தினம், குண்டு கல்யாணம், சிங்கமுத்து, நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, பி.கே.கலா மற்றும் தலைமை கழக சிறப்பு பேச்சாளர்கள் வைகை செல்வன், நாஞ்சில் சம்பத், பி.சி. அன்பழகன் உள்ளிட்ட 12 பேர் தேர்தல் களத்தில் இறங்குகின்றனர். இவர்கள் தவிர மேலும் சில அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்களையும் பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நட்சத்திர பேச்சாளர்கள் பொது மக்கள் மத்தியில் எப்படி பேச வேண்டும், எந்தெந்த கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து 27-ந் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்படுகிறது. அதன் பின்னர் பேச்சாளர்களுக்கு பிரசார பயண திட்ட பட்டியல் வழங்கப்படும். ஏப்ரல் 3-ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுபவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Response