பழம்பெரும் நடிகை கலைமாமணி கே.ஆர்.இந்திரா காலமானார்

kr-indra
கலைமாமணி பட்டம் பெற்றவரும், டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், ஜெயகீதாவின் தாயும் ஆன பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா (65) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். காஞ்சிபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் 14 வயதில் சென்னைக்கு வந்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ’கொஞ்சும் குமாரி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதே படத்தில் மறைந்த பழம்பரும் நடிகை மனோரமாவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர். நடித்த பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்தின் நம்பியாருக்கு ஜோடியாகவும், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் என்ற படத்தில் எம்.ஆர்.ராதாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். கந்தன் கருணை, ரஜினிகாந்தின் மன்னன், சிந்து பைரவி, பணக்காரன் உள்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக நடித்த படம் கிரிவலம். இதில் நடிகர் ரிச்சர்டின் பாட்டியாக நடித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த இந்திராவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்த நிலையில் திடீரென்று மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

கே.ஆர்.இந்திராவின் தந்தை கே.எஸ்.ராமசாமி பிரபல கர்நாடக பாடகர் மற்றும் நாடக நடிகர். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த கே.ஆர்.இந்திரா மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் உள்பட பலர் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இன்று மாலை 3 மணியளவில் கே.ஆர்.இந்திராவின் இறுதிச்சடங்கு நடக்கயிருக்கிறது.

Leave a Response