சத்ரியன் படத்தை பாராட்டி “யு” சான்றிதல் வழங்கிய தணிக்கை குழு

sathriyan
இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒரு படத்துக்கு சென்சாரில் யு சர்டிஃபிகேட் அதாவது அனைவரும் தாராளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற சான்றிதழ் கிடைப்பதே படத்தின் பாதி வெற்றியை நிர்ணயித்து வருகிறது. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் விக்கரம் பிரபுவை வைத்து சத்ரியன் படத்தை இயக்கியுள்ளார்.

இதுபற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது, “இன்றைய சூழலில் ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் படங்கள்தான் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என்ற நிலை இருக்கிறது. இயல்பாகவே நான் உறவினர்களோடு சினிமா பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் ஒரு குடும்பம் படத்தில் என்னவெல்லாம் எதிர்பார்க்கும் என்பது தெளிவாகத் தெரியும். அதனால்தான் என்னுடைய முந்தைய இரண்டு படங்களுமே குடும்பங்களை கொண்டாட வைத்தது. ஆனால் சத்ரியன் படம் முந்தைய இரு படங்கள் போன்றது அல்ல. பதிலாக கதையே ரவுடியிஸம், கேங்க்ஸ்டர் என்ற அடிப்படையில் அமைந்தது. எனவே எனது ஆஸ்தான குடும்ப ரசிகர்களுக்காக திரைக்கதையில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. படம் பார்த்து முடித்த சென்சார் அதிகாரிகள்.

‘இந்த ஆண்டு நாங்கள் பார்த்ததிலேயே ஒரு முழுமையான படம் இது என்று பாராட்டியதோடு, ஒரு நூலிழை மிஸ் ஆகியிருந்தாலும் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தர வேண்டியிருந்திருக்கும். அது ஏற்பட்டிராத அளவுக்கு நீங்கள் காட்சியமைப்பில் உழைத்திருந்தது ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிந்தது,’ என்று மனமார பாராட்டினார்கள். என் படைப்புக்கு கிடைத்த சின்ன அங்கீகாரமாக அவர்கள் அளித்த யு சான்றிதழையும் பாராட்டையும் ஏற்று அதை அப்படியே ரசிகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்க காத்திருக்கிறேன். நன்றியும் அன்பும்,” என்றார்.

Leave a Response