‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் கீரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’. ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியனும் கதாநாயகியாக அஸ்வினியும் நடித்துள்ளனர். இவர்களுடன் தங்கர் பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ‘கயல்’ தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அட்டகத்தி தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ சாங் வெளியீட்டு விழா செப்டம்பர் 3அன்று காலை சென்னைசாலிகிராமம் பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில்நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்த பாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன் “மிக மோசமான காலக்கட்டத்தில” இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக்காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் படம் இயக்கும் இயக்குனர்கள் பொறுப்பாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.” என்றார்
இயக்குநர் ரஞ்சித்,
“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப்போடும். பராசக்தியில் அதை பார்த்தோம். இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஒடினாலும் காக்கா முட்டை, ஜோக்கர் மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகிறது.
மெர்லின் படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ பாடலை பார்த்தேன். பிரமாதமாக வந்திருக்கிறது. மற்ற பேய் படங்களை காட்டிலும் மெர்லின் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
மேலும் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள் தங்கர் பச்சான், தமிரா, மகிழ் திருமேனி உட்பட அனைவரும் “மெர்லின் படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதற்கு இப்படத்தின் டீஸரும், ப்ரோமோ சாங்கும் சான்றாக அமைந்துள்ளது ” என்றனர்.