
பனிமதி பிலிம் புரொடக்சன் சார்பாக M.G.ராஜா தயாரிக்கும் புதிய படம் “நாளை முதல் குடிக்க மாட்டேன்” . இப்படத்தை பற்றி அவர்கள் வெளியீட்டுள்ள செய்தி அறிக்கையில் கீழே குறிப்பிட்டுள்ளவாறு தெரிவித்துள்ளனர்.
“நாளை முதல் குடிக்க மாட்டேன்” என்னும் புதிய படம் திருக்குறள் பொருட்பாலில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள பத்து திருக்குறளையும் உள்ளடக்கிய கதையை கொண்டு உருவாக்குகிறது. குறிப்பாக:
“உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்”
என்ற குறள் பொருந்தும். இதன் பொருள், மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள் என்ற கருத்தை மையப்படுத்தியே ஒட்டுமொத்த திரைக்கதையும் பின்னப்பட்டுள்ளது.
குடிபழக்கம் இல்லாத நபரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கும் பெண்ணிற்க்கும், குடிப்பழக்கத்தை தவிர வேறு எந்த பழக்கமும் இல்லாத ஒரு ஆணுக்கும் திருமணம் நடந்தால் குடும்பம் என்னவாகும் என்பதே இப்படத்தின் கதை.
நீங்கள் நினைப்பது போல் இது பழைய கதை அல்ல. திரைக்கதையில் புதிதாக நகைச்சுவை புரட்சியே செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி சின்னசேலம், ராயப்பனூர், நமச்சிவாயபுரம், தென்செட்டியந்தல், பைத்தந்துறை, எலியத்தூர், கல்வராயன் மலை ஆகிய ஊர்களில் 45 நாட்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
இயக்குனர் R.பாண்டியராஜன் அவர்களிடம் டபுள்ஸ் மற்றும் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்த திரைப்படத்தில் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் எப்படி மதுவிற்கு அடிமையாகிறார்கள் என்பது தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது. பன்னிரெண்டு வகையான குடிகாரர்களை வகைப்படுத்தி அவர்கள் திருந்துவதற்கான வழிமுறைகளும் இதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் தணிக்கை அதிகாரிகளால் தணிக்கை செய்யப்பட்டபோது, ஒரு நகைச்சுவை பட்டிமன்றம் போல் நடந்தது.
வெகு நாட்களுக்கு பிறகு அனைவரும் பார்க்கும்படியான குடும்பப்படமாக வளர்ந்துள்ள இப்படத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிறு சிறு வேடங்களில் நடிந்து வந்த காந்தராஜ் நகைச்சுவை வேடத்தில் படம் முழுவதும் வருகிறார்.
நடிகர்கள் ராஜ், காந்தராஜ், சமுத்திரக்கனி, பனிமதி, தமிழ், சுந்தரி, செல்வி, ரத்னகலா ஆகியோர் நடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சேர்ந்த MG ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். கோ.செந்தில்ராஜா எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை புன்னகை வெங்கடேஷ் மேற்கொள்ள, R. சிவசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.
ராஜ் கீர்த்தி படத்தொகுப்பை செய்துள்ளார்.

