சரிந்தது தமிழ்சினிமாவின் கல்தூண்..!

சமீப நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நேற்று இரவு காலமானார்.. தமிழ்சினிமாவின் ஆலமரமாக இருந்து கமல், ரஜினி, விவேக், பிரகாஷ்ராஜ், சரிதா என பல விழுதுகளை தந்தவர் பாலசந்தர்.

சின்னசின்ன விஷயங்களில் கூட பர்பெக்ஷன் பார்ப்பவர் பாலசந்தர். பொதுவாக பெண்களை அடுக்களையுடன் நிறுத்தி வைக்க முற்பட்ட சமூகத்தை கண்டித்தும் கிண்டலடித்தும் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராக தனது படங்கள் மூலம் குரல் கொடுத்தவர் பாலசந்தர்.

கதாநாயகர்களை நம்பி பலர் செல்கையில் கதைதான் நாயகன் என்பதை தனது படங்கள் மூலம் ஒவ்வொரு முறையும் அழுத்தமாக பதிவு செய்ய பாலசந்தர் தவறியதே இல்லை. அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும் அவரது வழித்தோன்றல்களும் அவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.