“எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஜோடிக்கப்பட்டவை” – ‘கத்தி’ தயாரிப்பாளர் விளக்கம்..!

விஜய் படத்திற்கு எந்த ரூபத்திலாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. அந்தவகையில் இப்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ திரைப்படமும் சென்சிடிவான பிரச்சனையில் சிக்கியுள்ளது. சொல்லாப்போனால் அனைவரையையும் பதம் பார்க்கவேண்டிய ‘கத்தி’யே இப்போது பலராலும் பதம் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘கத்தி’ லைகா புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் இங்கிலாந்து வாழ் இலங்கைத் தமிழரான சுபாஷ்கரன் அல்லிராஜா என்பவரின் லைகா மொபைல் நிறுவனத்தின் சார்பு நிறுவனமாகும். ஆனால் லைகா நிறுவனத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முதலீடு இருகிறது” என்பதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக சொல்லப்படும் காரணம்

இதனாலேயே ‘கத்தி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்று கூறி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த நிலையில் தங்கள் மீது எழுந்த குற்றச்சாட்டை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அனைத்து குற்றச்சாட்டுகளையும் அல்லிராஜா மறுத்துள்ளார்.

சரி இந்தப்பிரச்சனை இவ்வளவு சீரியஸாக இருக்கும்போது இதுகுறித்த விளக்க அறிக்கை அளிக்கவோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவோ மூன்று மாதங்கள் எடுத்துக்கொண்டது ஏன்? அதற்கும் காரணம் சொல்லியிருக்கிறார் சுபாஷ்கரன்..

“எங்களுக்கு 3 பில்லியன் யூரோ அளவிற்கு வியாபாரம் இருக்கிறது. நான் இவ்வளவு நாட்களாக ஐரோப்பிய நாடுகளுக்கு எனது வியாபர சம்பந்தமாக சுற்றிக்கொண்டிருந்தேன். அதனால் தான் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்துவதற்கு இவ்வளவு தாமதமாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.

மேலும், “அரசியலுக்கு அப்பாற்பட்டவன் நான். ராஜபக்சே பணம் கொடுத்துதான் படம் தயாரிக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் இல்லை. எங்கள் நிறுவனத்தின் இரண்டு நாட்கள் லாபத்தில், ஒரு தமிழ் படத்தை தயாரித்துவிட முடியும். எங்களுக்கு ஏன் ராஜபக்சே பண உதவி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.

இதுவரை ராஜபக்சேவின் பின்னணியில் எங்கள் நிறுவனத்தின் லோகோ உள்ளதாக வெளியான புகைப்படங்கள் எல்லாம் மார்பிங் முறையில் போலியாக சித்தரிக்கப்பட்டு எங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காகவே பரப்பிவிடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து நாங்கள் சென்னை மாநகர காவல்துறை கமிஷனரிடமும், சைபர் க்ரைமிலும் புகார் கொடுத்துள்ளோம்” என்றும் புகைப்படங்களின் பின்னணி குறித்து விளக்கினார்.

‘கத்தி’ படத்தை யாருக்கும் கொடுத்துவிடும் எண்ணமில்லை என்று கூறிய அவர் ‘கத்தி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார். இதுகுறித்து போராடும் அமைப்புகளை விரைவில் சந்தித்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாகவும், திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.