ரீமேக் ஆகிறது ‘மூன்றுமுகம்’..? – பயத்தில் ரஜினி ரசிகர்கள்..!

1983ல் ரஜினி மூன்று வேடங்களில் நடித்த சூப்பர்ஹிட் படம் தான் ‘மூன்றுமுகம்’. அதில் அலெக்ஸ்பாண்டியன் என்கிற போலீஸ் அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி. தற்போது இந்த ‘மூன்றுமுகம்’ படத்தின் ரீமேக் உரிமையை சத்யா மூவிஸில் இருந்து வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் ‘ஆடுகளம்’ கதிரேசன்.

கடந்த ஏழு வருட காலங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் அஜீத் நடித்த ‘பில்லா’வைத்தவிர மற்ற ரஜினி படங்களின் ரீமேக்கும், ரஜினி படங்களின் டைட்டிலை தாங்கி வந்த மற்ற படங்களும், ரஜினி ஏற்கனவே நடித்திருந்த அவரது படங்களின் பெயரையும் புகழையும் எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ அந்த வேலையை சரியாக செய்தன..

இப்போது ‘மூன்றுமுகம்’ என்றாலே ரஜினியின் ஞாபகம் வருவதைக்கூட ரீமேக் என்கிற பெயரில் சிதைக்க இருக்கிறார்களே என்கிற பயமும் பதட்டமும் ரஜினி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளதை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிடும் கருத்துக்களை வைத்து பார்க்க முடிகிறது..

இந்த ரீமேக்கில் நடிக்க எந்த முன்னணி நடிகர்களை ஆலோசித்தாலும் அது ரஜினி படத்திற்கு எந்த நியாயமும் செய்துவிடமுடியாது. அதிலும் மூன்றுவிதமான ரஜினி கெட்டப்புகளில் இப்போதைய நடிகர் ஒருவரை நினைத்தே பார்க்கமுடியவில்லை.. தயவுசெய்து ரஜினி படங்களின் ரீமேக் உரிமையை பணத்துக்காக இப்படி தாரைவார்த்து கொடுக்காமல் இருக்க முன் வருவார்களா முன்னாள் தயாரிப்பாளர்கள்..?