சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்…!

‘பீட்சா’ என்கிற வெற்றிப்படத்தை கொடுத்ததால், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா’ ரிலீஸ் மீது எதிர்பார்ப்பு இருப்பது உண்மைதான்.. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு பின்னர் ஒரு வாரம் தள்ளிப்போட்டுள்ள தயாரிப்பாளரின் செயல் படத்தின் நாயகன் சித்தார்த்தை வருத்தப்பட வைத்தது.

அதனால் தான் தயாரிப்பாளர் இந்த விஷயத்தில் தன்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.. இதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் தனது பதில் ட்விட்டில், “எந்த தயாரிப்பாளராவது விரும்பி, தங்களது படத்தை தள்ளிப்போட விரும்புவார்களா..? ஜிகர்தண்டா என் குழந்தை மாதிரி… ஒரு குழந்தை அழுவதையோ அல்லது அதற்கு ஏதாவது ஒன்று என்றாலோ அதன் தகப்பன் கவலைப்பட மாட்டானா..? அதே மாதிரிதான் நான் இப்போது எடுத்த முடிவும்.. தியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும் ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறும்போது நான் மட்டும் என்ன செய்ய முடியும்” என தனது தரப்பு நியாயத்தை சொல்லியிருந்தார்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சித்தார்த்துக்கு தெரிவித்துள்ள கண்டனத்தில், “சித்தார்த் அந்தப்படத்திற்கு பணம் போட்டிருக்கலாம். ஆனால் படத்தின் ரிலீஸ் சம்பந்தமான தயாரிப்பாளர் வேலைகளில் குறுக்கிட உரிமையில்லை” என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.