கமலுக்கும் மோகன்லாலுக்கும் வில்லி ஒரே ஆள் தான்..!

ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது கதையில் மொழிக்கேற்றவாறு சில மாறுதல்களை செய்வதோடு அந்த மொழியில் கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்வார்கள்.

ஆனால் ஒருசில கனமான கதாபாத்திரங்களை ஒரிஜினல் படத்தில் நடித்தவர் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இயக்குனர்களுக்கு தோன்றுவது உண்டு. ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான்.

சொல்லப்போனால் இடைவேளைக்குப்பின் ஆஷாவின் டெர்ரரான நடிப்பு பார்வையாளர்களை கடைசிவரை திகிலிலேயே வைத்திருக்கும். படத்தின் வெற்றிக்கு ஆஷாவும் மிக முக்கிய தூணாக இருந்தார். அதனாலேயே கன்னடத்தில் இதை ரீமேக் செய்த நம்ம இயக்குனர் பி.வாசு கூட அந்த கேரக்டரில் ஆஷாவே நடிக்கட்டும் என விட்டுவிட்டார்.

இப்போது தமிழில் ரீமேக்காகும் ‘த்ரிஷ்யம்’ படத்திலும் ஆஷா சரத் தான் நடிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகையையும் போட்டு அதன் தன்மையை சீர்குலைத்துவிட கமலும், படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும் விரும்பவில்லையாம்.

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துவந்த ஆஷா சரத்‘கர்மயோதா’ என்கிற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் இப்போது மலையாளத்தில் மட்டுமல்ல.. மும்மொழிகளிலும் ‘த்ரிஷயம்’ தான் அவரை ஒரேயடியாக புகழின் உச்சிக்கு ஏற்றியுள்ளது.