‘திகில்’ படத்தின் கதாநாயகியானார் ஷெரீன்…!

‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷுடன் அறிமுகமாகி இளவட்டங்களை கிறங்கடித்த தெற்றுப்பல் அழகி ஷெரீனை ஞாபகமிருக்கிறதா..? தொடர்ந்து ‘ஸ்டூடண்ட்ஸ் நம்பர்-1’, ‘விசில்’, ‘உற்சாகம்’ என சில படங்களில் நடித்தவர் கடைசியாக தமிழில் நடித்தது 2010ல் வெளியன ‘பூவா தலையா’ படத்தில்தான்.

நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஷெரீன் மீண்டும் உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி ஆகியிருக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் ஷெரீனுக்கு உதயநிதியை ஒருதலையாய் காதலிக்கும் கதாபாத்திரமாம்.

அதே நேரத்தில் ஷெரீனை தேடி ‘திகில்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் வந்திருக்கிறது. விளம்பரப்பட இயக்குனரான சந்தோஷ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ‘பிடிச்சிருக்கு’ நாயகன் அசோக் ஹீரோவாக நடிக்கிறார். சென்னையில் இருந்து தனது காதலனை தேடி கூர்க் செல்லும் ஷெரீன் அங்கே சந்திக்கும் விசித்திரமான சம்பவங்கள் தான் ‘திகில்’ படத்தின் திகில் கலந்த கதையாம்.