ரஜினியின் நண்பர் பட விழாவில் டி.ஆரிடம் சிக்கிய சின்னி ஜெயந்த்..!

பிரபல விநியோகஸ்தரும் ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்தின் எட்டு தயாரிப்பாளர்களில் ஒருவரும் ரஜினியின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான நாகராஜன் ராஜா தயாரித்துள்ள படம் தான் ‘புதியதோர் உலகம் செய்வோம்’. இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தையும் அவரே எழுதியுள்ளார்.

இந்தப்படத்தை நித்யானந்தம் என்பவர் இயக்கியுள்ளார். இவர் சின்னத்திரையில் ‘ஆனந்தம்’ என்ற நெடுந்தொடரை இயக்கியவர்தான்.. இந்தப்படத்தில் விஜய் டிவி ஜூனியர் சிங்கரில் வெற்றிபெற்ற பல குழந்தைகள் நடித்திருக்கிறார்கள். லஞ்சம் வாங்கும் பெற்றோருக்கு குழந்தைகள் மூலம் சவுக்கடி கொடுக்கும் படமாக இது உருவாகி இருக்கிறது.

பிரவீன் சைவி என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று காலை கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் ஜெயம் ரவி, தேவயானி, டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி, எஸ்.பி.முத்துராமன் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசியபோது படக்குழுவினரை வாழ்த்திவிட்டு சும்மா போயிருக்கலாம். ஆனால் அவருக்கு நாக்கில் சனி இருக்கும்போது அவர் என்ன பண்ணுவார் பாவம்..? தான் ஒரு முறை நடிகர் திலகத்தை சந்திக்க சென்றபோது அவர் டி.ராஜேந்தர் குரலில் தன்னை மிமிக்ரி செய்து காட்டும்படி சொன்னதாகவும் தான் செய்துகாட்டியபோது ரசித்ததாகவும் கூறினார்.

டி.ராஜேந்தர் பேசும் முறை வந்தபோது பல விஷயங்களோடு இதற்கும் சேர்த்து சின்னி ஜெயந்த்திற்கு பதிலடி கொடுத்தார்.. “காய்ச்ச மரம் தான் கல்லடி படும். ஜெயிச்சவனை வச்சுத்தான் மிமிக்ரி பண்ணமுடியும். சரி. என்னை மாதிரி மிமிக்ரி பண்ண உங்களுக்கு ‘டண்டணக்கா’ தான் கிடைச்சது. நான் எத்தனை விதமா அழகு தமிழ்ல பாட்டு எழுதியிருக்கேன்.. எத்தனை கவிதை சொல்லியிருக்கிறேன். ஆங்கிலத்துல எப்படி நோன்-ஸ்டாப்பா பேசுறேன்.. எங்க முடிஞ்சா இத மிமிக்ரி பண்ணுங்க பாப்போம்” என தனது பதிலில் சூடு வைக்க வேறு வழியில்லாமல் சின்னி ஜெயந்த் அதற்கும் அசடு வழிந்து சிரித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. வாயைக்கொடுப்பானேன்.. அப்புறம் வாங்கி கட்டிக்கொள்வானேன்..!