இயக்குனர் மு.களஞ்சியம்-அஞ்சலிக்கு இடையேயான ‘ஊர்சுற்றிப் புராணம்’ பட பிரச்சனை கடந்த ஒரு வருடமாகவே புகைந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் அஞ்சலி மீண்டும் தமிழில் நடிக்க இருக்கிறேன் என சீண்டல் ஸ்டேட்மென்ட் விட, பதிலுக்கு இயக்குனர் களஞ்சியம் “அஞ்சலி தமிழில் நடிக்க வருவதாக இருந்தால் என் படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு பின் வேறு படங்களில் நடிக்கட்டும்.. இல்லையென்றால் அஞ்சலியை சட்டப்படி கோர்ட்டுக்கு இழுப்பேன்” என கூறியிருந்தார்.
ஆனால் அஞ்சலியோ “என் மீது எந்த தவறும் இல்லை.. ஒருசிலர் சொல்வதுபோல என் படங்களை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அதனால் என்னை வைத்து படம் பண்ண நினைப்பவர்கள் தாராளமாக என்னை அணுகலாம்” என தெரிவித்திருந்தார்.
சவால் விட்டபடி சுராஜ் டைரக்க்ஷனில் ஜெயம் ரவி நடிக்கும் படப்பிடிப்பில் அவருக்கு ஜோடியாக நடிக்க இன்று கலந்துகொள்கிறார். அஞ்சலி நடிக்க தடைவிதிக்கவேண்டும் என இயக்குனர் சங்கத்திடம் மு.களஞ்சியம் முறையிட்டுள்ள நிலையில் இன்று அஞ்சலி துணிச்சலுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்வது திரையுலகத்தில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இயக்குனர் சங்கமும் மு.களஞ்சியமும் என்னவிதமான அதிரடி அணுகுமுறையை கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.