“விஸ்வாசம்” படத்தை பாராட்டிய காவல் துறை அதிகாரி..!

கடந்த 10ஆம் தேதி ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் வெளியான அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலையும் தாண்டி இரண்டாவது வாரமாக ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஆக்சன் காட்சிகளை விட தந்தை-மகள் செண்டிமெண்ட் காட்சிகள் தான் அதிகம் பிடித்துள்ளது. இந்த நிலையில் சென்னை காவல்துறை துணை ஆணையர் சரவணன் என்பவர் ‘விஸ்வாசம்’ படத்தில் தனக்கு பிடித்த காட்சிகள் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்’ என்று காவல்துறை துணை ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Leave a Response