எந்த சாமி நினைத்தாலும் நடக்காது! காவிரி நீர் முழுமையாக கிடைக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்..!

தமிழகத்துக்கு காவிரிநீர் முழுமையாக கிடைக்கும் என்றும் குமாரசாமியோ, நாராயணசாமியோ நினைத்தால் அது முடியாது; பிரதான சாமியாக இருப்பது ஆணையம்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, பட்டினப்பாக்கத்தில் அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு காவிரி நீர் முழுமையாக கிடைக்கும். காவிரிதொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆணையம் நிறைவேற்றும். காவிரி விவகாரத்தில் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பிரதமரை சந்திப்பதால் பயனில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து என்ன செய்துவிட முடியும். குமாரசாமியோ,  நாராயணசாமியோ நினைத்தால் அது முடியாது. பிரதான சாமியாக இருப்பது ஆணையம்தான். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தலைவணங்கி அதை நிறைவேற்றும்பொறுப்பும் கடமையும் ஆணையத்துக்கு உண்டு.

ஜெயலலிதாவையும், புரட்சி தலைவரையும் ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாக கழகத்துக்கு திரும்புவார்கள். அதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூறியுள்ளார். காலத்தின் கட்டாயம் அவர்கள் இங்கு வந்துதான் ஆக வேண்டும். டிடிவி அணியில் இருப்பவர்கள் எங்கள் அணிக்கு வருவார்கள்.

உள்நாட்டில் மக்கள் அமைதியாக இருக்க போலீஸ் பாதுகாப்பு வேண்டும். சட்டத்தை முழுமையாக மதிக்க வேண்டும். இது கற்காலமல்ல. யார் யார் எப்படி செயல்பட வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி செயல்பட வேண்டும். அப்படி மீறி செயல்பட வேண்டும் என்பது எப்படி முறையாகும்?

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்போதுதான் போலீஸ் தலையிடும். சூழ்நிலையைப் பயன்படுத்தி பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்க வேண்டும் என்பதை அரசுஅனுமதிக்காது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் எந்தவொரு திட்டமும் செயல்வடிவம் பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Response