குரங்கணி காட்டுத்தீ விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்வு !

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 19-ஆக உயர்ந்துள்ளது. 56% தீக்காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூரை சேர்ந்த சாய் வசுமதி (26) சிகிச்சை பலனின்றி காலமானார். தஞ்சாவூரை சேர்ந்த வசுமதி சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நண்பர்களுடன் இணைந்து மலையேற்ற பயிற்சிக்காக சென்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. அப்போது இந்த மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்ற 36 பேர் காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, மீட்புப் பணிகளை தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் காவல்துறை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 9 பேர் சடலமாக மீட்கப்பபட்டனர்.

மேலும் 16 பேர் பயங்கர தீக்காயங்களுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சைப் பலனின்றி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி என்பவர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார்.இதன் மூலம் குரங்கணி தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

Leave a Response