சென்னை அரசு பொதுமருத்துவமனையான ராஜிவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 250 பேர் ரத்ததானம் செய்தனர். தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனமான பி.பி.ஜி அறக்கட்டளை சார்பில் இந்த ரத்ததானமுகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ‘வைகை’ பட தயாரிப்பாளருமான மறைந்த பி.பி.ஜி குமரன் பிறந்த தினத்தை முன்னிட்டு, பி.பி.ஜி அறக்கட்டளை சார்பில் சென்னை அரசு பொதுமருத்துவமனையான ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் பிரமாண்ட ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 250 பேர் ரத்ததானம் செய்தனர். இந்த ரத்ததான முகாமை அறக்கட்டளை நிர்வாகி சங்கர், வளர்புரம் ஊராட்சிமன்ற தலைவர் ஏசுபிள்ளை ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் வக்கீல் ரவிச்சந்திரன், சுந்தரபாண்டி, சுதாகர், மைக்கேல், வினோத், சேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பி.பி.ஜி அறக்கட்டளை சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக இதுபோன்ற பிரமாண்ட ரத்ததான முகாம் நடைபெறுவது குறிப்பிடதக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பான முறையில் ரத்ததான முகாம் நடத்திவரும் அறக்கட்டளை என பல்வேறு அமைப்புகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் பிபிஜி அறக்கட்டளை பெற்றிருக்கிறது.
ஒரே நாளில் 250க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ரத்ததானம் செய்தது வரவேற்கத்தக்கது என மருத்துவமனை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.