பிரியாணி பாடல்களை திருட்டுத்தனமாக யூடியுபில் வெளியிட்ட நபர் கைது – வெங்கட் பிரபு:

பிரியாணி திரைப்பட பாடல்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு யூடியுபில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதன் காரணமாக அதன் தயாரிப்பாளர் மற்றும் அந்த திரைப்பட குழுவினருக்கு மனரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பெரிய இழப்பு நேர்ந்ததாக கூறி அப்போது கிண்டியில் உள்ள தமிழக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று நடந்த பிரியாணி திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நம் நிருபர் அந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த இயக்குனர் வெங்கட் பிரபு, அந்த பாடல்களை யூடியுபில் வெளியிட்டது அம்பத்தூரை சேர்ந்த ஒரு பையன் என்று தெரிவித்தார். அந்த நபர் காவல் துறையினாரல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யூடியுபில் திருட்டுத்தனமாக பாடல்கள் வெளியிடப்பட்டதால், அப்போதே சில தினங்களில் தாங்களே பாடல்களை வெளியிட்டதாக வெங்கட் பிரபு தெரிவித்தார்.

இந்த புகார் ஒரு விளம்பரத்திற்காகவா என்ற சந்தேகத்திற்கு, இல்லை யூடியுபில் பிரியாணி திரைப்பட பாடல்கள் திருட்டுத்தனமாக தான் வெளியிடப்பட்டது என்று முற்றுப்புள்ளி வைத்தார் வெங்கட் பிரபு.