கஸ்தூரி ராஜாவின் காசு, பணம், துட்டு!

Kasu-Panam-Thuttu-Movie

தனுஷ் நடித்த ‘3’ படத்தை தொடர்ந்து ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் படநிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு ‘காசு பணம் துட்டு’ என்று பெயரிட்டுள்ளனர். கஸ்தூரிராஜா இயக்கத்தில் ‘அசுரகுலம்’ என்ற பெயரில் தயாரான படமே ‘காசு பணம் துட்டு’ என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது. இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது.

இந்த படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள் முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், மினடிஸ், அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமானின் தங்கை ரஹனாவின் உதவியாளர் சாஜீத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் கஸ்தூரிராஜா கூறும்போது, “சென்னை குடிசைப்பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்த சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது. பிறக்கின்ற குழந்தைகள் எதுவும் கிரிமினலாகப் பிறப்பதில்லை சூழ்நிலைதான் அவர்களை கிரிமினல் ஆக்குகிறது.

இவர்கள் வாழும் வாழ்க்கையில் தவறுகளில்லை. ஆனால் தவறுகளே வாழ்க்கையாகிப் போவதுதான் கொடுமை. இவர்களை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ‘சென்னை நகரத்து பூங்கா புதர்களில், குடிசைகளில் குப்பை புதர்களில், நடைபாதை ஓரங்களில், சந்து பொந்துகளில், ரயில் நிலையங்களின் மறைவிடங்களில், கூவத்தின் கரையோரங்களில் அடங்கிப்போன கவிதைகள். இது தான் கதைக்களம். கஸ்தூரிராஜா படமென்றால் இப்படிதான் இருக்கும் என்கிற வரைமுறைகளை மாற்றிக் காட்டும் படமாக ‘காசு பணம் துட்டு’ இருக்கும்” என்றார்.