ராஜா, ரஹ்மான் பாடல். அமிதாப், ஷாருக் கலந்து கொள்ளும் இந்திய சினிமா 100!

big_Isaignani_Ilayaraja_and_Oscar_winner_A_R_Rahman_in_London-51591c0c64aa9b3e80ee7a9e0e3c9b09

இந்திய சினிமா தொடங்கி நூறாண்டுகள் நிறைவடைகின்றன. இதற்கான விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட்டின் சாதனை நாயகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும் அழைக்கப்பட்டுள்ளனர்.

மூன்று நாள் நிகழ்ச்சிகளாக, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படத் துறையினர் பங்கு பெறுகிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் முதல்வர்களுக்கம் நேரில் அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் நாள் நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் மலையாளத்துறைக்கும், இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் தெலுங்கு, கன்னடத் திரைத்துறையினருக்கும், மூன்றாவது நாள் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்களைக் கொண்டாடும் வகையில் அவர்களின் தபால்தலைகள் வெளியிடவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட, இந்திய சினிமா இசையின் ஜாம்பவான்கள் இளையராஜாவும் ஏ ஆர் ரஹ்மானும் இணைந்து ஒரு பாடலை உருவாக்கப் போகிறார்கள்.

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாக இந்தப் பாடல் இடம்பெறவிருக்கிறதாம். இதனை இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் இணைந்து இசையமைத்து உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என அவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்துள்ளனர் விழா அமைப்பாளர்கள். இருவருமே இந்தக் கோரிக்கையை புன்னகையுடன் கேட்டுக் கொண்டாலும், இன்னும் அதுகுறித்து உறுதியான பதிலைச் சொல்லவில்லையாம்.

“பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜாவும், ஏ.ஆர் ரஹ்மானும் இந் நிகழ்ச்சிக்கென சிறப்பான ஒரு பாடலை இசையமைக்க இருக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் இன்னும் உறுதி செய்யவில்லை. ஆயினும், விரைவில் அந்த உன்னதமான பாடலைக் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதி நாளன்று இந்தப் பாடல் அரங்கத்தில் நிகழ்த்தப்படும்,” என பிலிம் சேம்பர் தலைவர் சி.கல்யாண் தெரிவித்துள்ளார்.