எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது : கே.பாக்யராஜ்..!

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

‘கிரிஷ்ணம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இதனை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு இயக்குநர் பாக்யராஜ் பேசினார். அப்போது அவர்,”எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் உள்ளது” என்று குறிப்பிட்டு பேசியது பலரது கவனத்தை ஈர்க்கும்படி இருந்தது.

மேலும் அவர் பேசும்போது, “நான் சினிமாவுக்காக சென்னை புறப்பட்ட போது என் அண்ணன் ஒரு பெரிய ஜோதிடரை அழைத்து வந்தார். அவரோ எனக்கு சினிமாவே சரிப்பட்டு வராது. இரும்பு சம்பந்தப்பட்ட வேலைதான் சரி வரும் என்றார். நான் சினிமாதான் என்று பிடிவாதமாக இருந்தேன். என் அம்மாவிடம் சினிமாவில் கேமரா, ஸ்டாண்ட்,டிராலி எல்லாம் இரும்புதான் என்னை நம்பு என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

எங்களுக்கு ஒரு ஒர்க் ஷாப் இருந்தது. அதில் என்னை வேலை செய்ய வைக்க முயற்சி நடந்தது. இது என் அண்ணனின் ஏற்பாடாக இருக்குமோ என்று பிறகு நான் நினைத்தேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்பட ‘கிரிஷ்ணம்’ குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம்”என்றார்.

மேலும் அவர், “இங்கே பேசியவர் தனது மகனை பெரிய ஆபத்திலிருந்து குருவாயூரப்பன் காப்பாற்றியதாக சொன்னார். அதற்கு அவர் தன்னுடைய பக்திதான் காரணம் என்றும் சொன்னார். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் குருவாயூரப்பன் அருள் உள்ள ஒரே ஒருத்தர் எடப்பாடி பழனிசாமிதான். அவருக்குதான் குருவாயூரப்பன் அருள் அதிகமாக இருக்கிறது. யாருக்கு எப்போது அருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நானும் வேண்டி கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் நாம் வேண்டி கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் நினைத்தது நடக்க மாட்டேன் என்கிறது” என்றார்.

Leave a Response